Friday, July 15, 2011

தங்கை இவள்

சின்னஞ் சிறு வயது முதல்
நான் அறிந்த தேவதை இவள்!
என்னோடே வளர்ந்து வந்த
சித்திரம் இவள்!
தங்கை இவள்
எனக்கென்று பதறுகையில்
தாயும் இவள்!
அப்பாவிடம் சொல்லி
என் திருட்டு உணர்த்திய
இவள் தானே
பிறிதொரு நாளில்
மாடு முட்ட வர
என் பின்னால் ஒளிந்து
நான் ஆளானதையும் உணர்த்தியவள்!
முழித்து விடுவாளோ என்றே 
மூச்சடக்கி பார்த்திருந்தது எத்தனை காலம்.
ஆக்கி தின்னக் கூட்டாஞ்சோறு -
இன்று நினைத்தாலும்
சிறுபிள்ளைத்தனமாய் தோன்றவில்லை.
இவள்  தத்தி தத்தி தமிழ் பேசிய
நடை பழகிய நாட்கள்
என் நினைவில்.
நெஞ்செல்லாம்
இவள் அள்ளித் தந்த புன்னகையே

Saturday, July 9, 2011

காதல்

 தந்தை பெரியாரின் பார்வையில் காதல் பற்றிய கருத்தை இவ்வாறு கொள்ளலாம்

ஆசையை விட                                                         
அன்பை விட
காதல் என்பதாய் எதுவும் இல்லை.

கலப்பு திருமணத்தை ஊக்குவித்து வளர்த்த வெண்தாடி வேந்தர் காதலை இவ்வாறு விளம்பியது காதலையும் சந்தைபடுத்தி  அசுரத்தனமாய் வளரும் முதலாளித்துவத்தை மனதில் கொண்டே என்பது என் எண்ணம்.

நட்பில் ஆசைகள் வருவதில்லை
ஆசையாய் நட்பும் வருவதில்லை
ஆனால் காதல் அப்படி அல்லவே
ஆசையாய் காதலும்
காதலினால் ஆசையும்
வந்தால் மட்டுமே அது காதல்!

ஆசை ஆசையாய் ஒரு நட்பு!
அற்புதமானதொரு நட்பில்
அற்பமாய் ஓர் ஆசை!
அவ்வளவே காதல்

எங்க வைகை

முன்பொரு நாள் முக்கொம்பு (திருச்சி) சென்று இருந்தேன். இரு கரை தொட்டு செல்லும் காவிரியின் பிரம்மாண்டம் எனக்கு பிரமிப்பூட்டியது. அத்தனை வேகம் இருந்தும் சாந்தமாய் செல்லும் காவிரி என்னை வெகுவாய் ஆச்சர்யபடுதினால். நான் விவரம் அறிந்த வயதில் இருந்தே இரு கரை தொட்டு சாந்தமாய் செல்லும் வைகையை பார்த்ததில்லை. எப்போதாவது எங்கள் வைகையும் இரு கரை தொட்டு செல்வாள்... ஆனால் அப்போதெல்லாம்...

வைகையிலே 
எங்க வைகையிலே
கரை தொட்டிட்டாலும்
நுரை பொங்கிட்டாலும்
வந்திடுமே
வெள்ளம் வந்திடுமே
வீதி வீடெல்லாம் புகுந்திடுமே
செய்கூலி இல்லாம சேதாரம் தந்திடுமே
காவும் வாங்கிடுமே
கண்ணீரு வத்தமுன்னே
கண்ணீரு வத்த முன்னே
வைகையும் வத்திடுமே
கரையும் காஞ்சிடுமே
மைதானம் ஆகிடுமே

தாயின் மார் வற்றினாலும்
அழும் குழந்தை
அவள் கதகதப்பில் தான் அடங்கும்!
அப்படியே
அப்படியே நானும்
எங்கள் வைகையிடம்.

நட்பாகவே விழைகிறேன்

எட்டுத் திக்கும்
முட்டித் திரும்பி
செல்லும் திசை அறியாது இருந்தேன்
எங்கிருந்தோ வந்த நீ
கைகாட்டி மரமாய் நின்றாய்
ஒன்பதாவது திசையாய்
விண்ணை காட்டினாய்
இதோ
விண்ணை முட்ட எத்தனிக்கிறேன்
வென்றால் நட்சத்திரமாவேனோ?
வீழ்ந்தால் விதையாவேனோ? அறியேன்
எதுவானாலும்
உன் நட்பாகவே விழைகிறேன்!

புகைப்படம்: அருண் நாதன்  இடம்: பாம்பன், ராமேஸ்வரம் 

தயக்கம்

அனுப்பிச்ச ரூவா கிடைச்சிடுச்சா பா?
………..
அங்க ரொம்ப குளிராமே?
இன்னொரு போர்வை வாங்கிக்கய்யா
என்ற தாயிடம்
எப்படிச் சொல்வேன்?
விடுதிக் கட்டணத்திற்கே
இன்னும் நூறு ரூவா தேவை என்று!

Wednesday, July 6, 2011

நீ + நான்


எனக்கான உன் அக்கறையை விட
உனக்கான என் அக்கறையை விட
நட்பென்பதாய் வேறொன்றும் இல்லை!

உலகம் நம்மை
நண்பர்களாய் கண்டு கொண்டிருக்க
நீ என்னையும்
நான் உன்னையும்
அவர் அவருக்கான பிம்பமாகவே காண்கிறோம்!

கண் முன்னே விரிங்கின்றன நம் கல்லூரி நாட்கள்....
என் நிழலாய் நீயும் 
உன் நிழலாய் நானும்
வாழ்ந்த நாட்கள்

என் இலக்கிற்கான பாதையில்
நான் உன்னையும்
உன் இலக்கிற்கான பாதையில்
நீ என்னையும்
கண்ட போது தான்
நம் நட்பு நெருக்கமானது

என் பிறந்த நாளுக்கு நீயும்
உன் பிறந்த நாளுக்கு நானும்
அளித்துக் கொண்ட பரிசுகள்!

இரட்டைக்  குழல் துப்பாக்கி
இவர்கள்!
எனப் பெயரெடுத்தது

உன் கைக்குட்டை
மட்டுமே அறிந்த
என் கண்ணீர் துளிகள்!

வார்த்தைகள்
உடைக்க முற்படாத போது
மௌனங்களில் கரைந்த துக்கங்கள்!

என் கண்கள் லேசாய் கலங்குகின்றன...
காலம் நம்மை தள்ளி வைத்தாலும்
தனியே நடை பழகிக்
கற்றுக் கொண்டாலும்
காத்திருப்போம்
எதிர் பார்த்திருப்போம்

வாரிசுகள் நாங்கள்!

ஆதித் தமிழை புறந் தள்ளி 
அன்னியர் நுழைந்து
சமணம் அழித்து, ஆதாரம் சிதைத்தே
தமிழன்னையின் 
வீணை முறித்து எறிந்த போது
பகை முறித்து - வீணை செய்தே
கை நரம்பு அறுத்து
வீணைக்கு நரம்பாய் முறுக்கேற்றியே 
அன்னைக்கு  கொடுத்து - மொழி காத்திட்ட
தமிழ் சாதியின் வாரிசுகளடா நாங்கள்!

வாழ்ந்து கொண்டிருப்பது நாங்கள்
மெல்லச் சாகுமோ தமிழ் இனி?
வீழ்ந்திடுவோமோ நாங்கள்?

மூச்சு உள்ள வரை
தமிழ் சுவாசிப்போம் நாங்கள்
காற்றில் கரைந்தாலும்
தமிழுக்கே சுவாசம் ஆவோம் நாங்கள்

மெல்லச் சாகுமோ தமிழ் இனி?

என்ன கொடுமை சார் இது?

நெருங்கி வந்து சிணுங்குகிறாள்
பற்றி எரிகிறேன் நான்!
சற்றே விலகி முறைக்கிறாள்
உருகுகிறேன் நான்!
இப்படியெல்லாமா விளையாடுவது?

அவளை பாட்டுப் பொருளாய் வைத்திருக்கிறேன் நான்
என்னை விளையாட்டுப் பொருளாய் வைத்திருக்கிறாள் அவள்!

கவிதை தான் நீ!

கவிதை எழுதலாம், கவிதையே தன்னை பற்றி கவிதை எழுத சொன்னால் என்ன செய்வது... அன்று அது தான் நடந்தது. அவள் பற்றி கவிதை வேண்டுமாம். அவள் வீட்டில் காண்பிப்பதற்காம். அதனால் அவள் பற்றிய வர்ணனையாக இருக்க கூடாதாம். ஆனால் அழகாக இருக்க வேண்டுமாம். பின்னாளில்  உதவும் என்று அவரையும் புகழ்ந்து வைத்தேன். ஹ்ம்ம்.... எப்போ டின்னு கிழியப் போகுதோ?  

ஈற்றடியில் குறள்
மூன்று அடியில் ஹைக்கூ 
நான்கு அடியில் வெண்பா 
நாலே முக்கால் அடியில் நீ!
கவிஞர் தான் உன் தந்தை! 

Tuesday, July 5, 2011

நிலா!

அவர்கள் எங்கள் தெருவில் புதியதாய் குடி வந்திருந்தார்கள். அன்று தான்  அவளை முதல் முறை பார்த்தேன். மொட்டை மாடியில் சோறு ஊட்டி கொண்டிருந்தாள் அவளின் அக்காள் குழந்தைக்கு.

நிலா காட்டி சோறு ஊட்டுவதை
பார்த்திருக்கிறேன்
நிலவே சோறு ஊட்டுவதை
அன்று தான் பார்த்தேன்!
கொடுத்து வைத்த குழந்தை அது
பின்னே! நிலவு கையால் தின்கிறதே!

அமாவாசை விரதம் முடிக்கனும்
சாப்பிட வாடா - அம்மா அழைத்தாள்
இவர்கள் எங்கே அறிவார்கள்
இனி எல்லா நாளும்
எங்கள் ஊரில் பௌர்ணமி என்பதை
நிலவு தான் -  எங்கள்
தெருவிற்கே குடி வந்து விட்டதே!
இவர்கள் நிலவில் வாழ ஆராய்கிறார்கள் 
நானோ நிலவுடனே  வாழ ஆயத்தமாகிவிட்டேன்!

அழகு தானுங்க!

பூவை நீ சூடிய பூ 
மோட்சம் அடைந்தது என்றேன் 
உனக்கும் வேண்டுமா? என்றாள் 
கிட்டிடுமா? என்றேன் 
ச்சீ போடா! என்றாள் 
அவள் அவமதித்தலும் அழகே!

Monday, July 4, 2011

இலங்கை

உற்றுப் பாருங்கள் 
உலக உருண்டையில் 
கண்ணீர்த் துளி!

காந்தியின் புன்னகை

காந்தியின் புன்னகை 
அன்று 
இம்சர்களையும் அஹிம்சர்கள் ஆக்கியதாம்
கல் நெஞ்சங்களையும் கரையச் செய்ததாம் 

இன்று 
குற்றவாளிகளையும் நிரபராதி ஆக்கும்
முட்டாள்களுக்கும் பட்டமளிக்கும் 
இருப்பவர்களிடம் மேலும் சேரும் 
இல்லாதோரின் ஏக்கம் ஆகும் 

அது நிஜப் புன்னகை 
நிகர் இல்லா நகை 
இது நகல் புன்னகை 
எதையும் நிகர் செய்யும் வகை  

என் அனுதாபங்கள்!

நாலு கால் இருந்தும் 
முடியவில்லையே நடக்க 
நாற்காலி!


ஆதிக்க சாதி!

மேளச் சத்தம் கேட்டது
எச்சில் இலைகள்  விழுந்தன
பன்றிகள் குவிந்தன
மாடுகளும் வந்து மேய்ந்தன 
நாய்கள் குரைத்தன
அனைத்தையும் புறந்தள்ளி 
அள்ளி 
வாயில் இறைத்தான்
பிச்சைக்காரன்!

விழி மொழி!

தமிழை விடவும் அழகியதொரு மொழி 
இருக்குமென்று எண்ணியதில்லை 
உன் விழி மொழி வாசிக்கும் வரை!
அதெப்படி உன்னால் மட்டும் முடிகிறது
பார்வையிலேயே கொஞ்சுகிறாய், குழைகிறாய் 
சிரிக்கிறாய், கண்டிக்கிறாய்!
சிறு பார்வையாலே
நீ என்னைக் கிள்ளவும் செய்கிறாய்!
கொல்லவும் செய்கிறாய்!

புருவங்களை உயர்த்தி இறக்கி 
கைகள் ஆட்டி நீ பேசுகையில் 
சிந்துவது என்னவோ கவிதை தான் 
ஆனால் நான் தான் 
செத்து செத்து பிழைக்கிறேன்!

குலுங்கி நீ சிரிக்கையில்
விழும் கண்ணக் குழி அழகில்
தடுக்கி விழுந்து
முழித்துக் கொண்டிருப்பேன் நான்!
என்னாச்சு இவனுக்கு என்று
வெள்ளந்தியாய் பார்ப்பாய் நீ!

அது வேண்டும் என்று கைகாட்டி,
அடம் பிடித்து
உணர்த்துகிறாய்
குழந்தை நீ எனக்கு என்று!

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது 
இப்படி செல்லம் கொடுக்க
அதிகமாய் தான் செல்லம் கொடுக்கிறாய் நீ 
கொடுக்கையில் குழந்தையாக்குகிறாய் 
பெறுகையில் குழந்தையாகிறாய்!

இப்பொழுதெல்லாம் புரிகிறதோ இல்லையோ
உன் பார்வைகளுக்கு கட்டுப் படுகிறேன்
கேண்டீனில்,  ஒரு மாலை பொழுதில்,
ஏதோ பேச நான் எத்தனித்த போது
போதும் நிறுத்து என்பதாய்
கை உயர்த்தி முறைக்கிறாய்
உயர்த்திய கையில் 
அப்படியே விரல் மடித்து
அண்ணா ரெண்டு டீ ஒண்ணு ஸ்ட்ராங்கா 
என்று எனக்கும் சேர்த்து சொல்லிவிட்டு
மீண்டும் முறைக்கிறாய்!
மீண்டும் நான் பேச வாயெடுத்தால்
பாஸு டீ இன்னும் வரலை
என்று நகையாடுகிறாய் 
புரியாமல் சிரிக்கிறேன் நானும்!

இப்படியே, இப்பொழுதே
விழிகளில்
உன் விழிகளில்
என் உலகம் உறைந்திட வேண்டும்!


- அருண்

Sunday, June 5, 2011

மாநகராம் மதுரைக்கு மைந்தன் எழுதிக் கொள்வது!

நான்கு வயதில் உன்னை விட்டு பிரிந்து சென்றவன், என் 18 வயது வரை மேற்கு தொடர்ச்சி மலையின் கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் உன் பெருமைகளை கேட்டு வளர்ந்தேன். மாறி மாறி 7  பள்ளிகளில் பள்ளிப் படிப்பை முடித்தவன் மீண்டும் கல்லூரி படிப்பிற்காக உன்னிடம் வந்தேன்.
 

புலம் பெயர்ந்த  நான்
என் வேர் தேடி வந்தேன்...
பாசத்தை காட்டினாய்,
பச்சை துரோகங்களையும் காட்டினாய்!

யாதவர் கல்லூரி நூலககத்தின்
சூழல் கற்று தந்த சாந்தமும்...
சோகமானாலும், கோபமானாலும்
பேனா தூக்கியதும்-என
வன்மத்தின் விளக்கமாய் கற்பிக்கப்படும் உன்னிடம்
நான் பெற்ற நல்லவைகள்,
காலம் போனாலும் மாறாத சுவடுகள்!
ஐந்து அரியர்கள் வைத்ததும்,
ஆறாவது அறிவை கூர்மையாக்கியதும்,
ஞாயிறு கூட நூலகம் சென்று படித்
ததும்,
செமஸ்டர் தேர்வை கட் அடித்து-
கில்லி படம் பார்த்து திரிந்ததும்,
உன்னிடத்தில்தான் எல்லா சுதந்திரமும்!

எனக்கு பெரியாரை அறிமுகப்படித்தியதும் நீ ...
சாதி வன்மையைக் காட்டிக் கொடுத்ததும் நீ ...
திராவிடத்தின் முற்போக்கு தெரிவித்தும் நீ ...
அந்நியர்கள் வந்த சுவடுகளை காட்டியதும் நீ...
மண்ணுக்கேற்ற மார்க்சியத்தின் அவசியம் உணர்த்தியதும் நீ...

உலகமயமாக்கலின் தாக்கத்தால்-
ஓடிக் கொண்டிருந்ததும் இங்கு தான்!
ராயல் கோர்ட்டில் உண்டு களித்ததும் இங்கு தான்!
நள்ளிரவில் போஸ்டர் ஒட்டித் திரிந்ததும் இங்கு தான்!
  
நீ வெறும் ஊரல்ல எனக்கு,
நாடோடியாய மட்டும் வந்து போக-
நீ வேண்டாம் எனக்கு!
தமிழ் சங்கம் வளர்த்த உன்னை-
பிரியும் வலி,
விவரிக்க வார்த்தைகளற்ற பலி!
அது சொல்லியும் மாளாது இனி...
நீ வெறும் ஊரல்ல எனக்கு! 

வேலை தேடும் பலருக்கும்
பல தேவைகள்
பல காரணங்கள் 
பலருக்கு பிழைத்திருக்க வேண்டும்,
சிலருக்கு செழித்திருக்க வேண்டும் 
எனக்கோ உன்னில் இருக்க வேண்டும்!

உன்னில் வசிக்கும் பலர் 
வேலைக்காக 
காதலிக்காக 
அந்தஸ்த்துக்காக 
அலாரமாக செல்வதற்காக 
வண்டி வாங்குகிறார்கள், நானோ 
உன்னைச் சுற்றி திரியவே,
ஆசையாய் வாங்கினேன்
என் முதல் யமஹா!

நான் மதுரக்காரன்!
எனக்கு நாக்கும் ஒன்னு 
வாக்கும் ஓன்னு
என அடிக்கடி
பெருமையாய் கூறுவதுண்டு!

ஆனால்
இன்று கொடுத்த வாக்கை மறந்து, 
உன்னை விட்டு பிரிந்து போகும்
என்னை
வேஷக்காரன் இவன்
என்று மட்டும் ஏசிடாதே!


உன்னை பிரிந்து செல்வது
அத்தனை எளிதல்ல எனக்கு!
கோனார் கடை, அம்மா மெஸ் - ருசித்து சாப்பிட,
மரண விலாஸ், பொன்னையா மெஸ் - தினமும் சாப்பிட,
செட் புரோட்டா,
நள்ளிரவு தேநீர்,
நடு நிசி வீதி உலா,
டாப் அடிக்க தமிழ்ச் சங்கம் வீதி, செல்லூர் கண்மாய்,
என அனைத்தையும் விட்டு செல்கிறேன்!

நான் ஆண்பிள்ளை என்பதை-
அடிக்கடி நினைவுபடுத்தும்!
ஒன்பது மகளிர் கல்லூரிகள்,
கோவில் வீதி தாவணிகள்,

தினம் காலையில்
என் தேநீர் வேளையில்
சாலை கடக்கும் அவள்
கல்லூரி காலத்தில் பார்த்த அதே அவள்
இப்போது புதிதாய், அழகாய் புடவையில்
என அனைத்தையும் விட்டு செல்கிறேன்!

மாதம் பிறக்கும் முன்னே
வங்கி கணக்கில் ரூ. 25000/- 
வாரம் இரண்டு இரவு சினிமா 
இரண்டு இரவு நகர் வலம்
எஞ்சிய இரவு நிலா தூக்கம் 
ஞாயிறு அன்று அம்மாவின் ஸ்பரிசம் 
சாம்பார் சாதம் 
தங்கையுடன் சண்டை
என அனைத்தையும் விட்டு செல்கிறேன்!

என் பாட்டன் முப்பாட்டன்-
வாழையடி வாழையாய் வழிபட்ட 
கருப்பணசாமி,
கட்டி அனைத்த தோழர்கள்,
கசப்பை உமிழ்ந்த கனவான்கள்,
உயிர் கொடுக்கும் நட்பு,
எனக்காக கண்ணீர் சிந்த 
என்னைக்  கொண்டாட 
எனக்கென்று ஒரு கூட்டம்,
என் ஆசை யமஹா,
என் சொந்த நிறுவனக் கனவு,
என அனைத்தையும் விட்டு செல்கிறேன்!


நான்...
நம்பியவர் மாரில் பாய்ந்த கிடா
என் கனவுகளுக்கும்
கள்ளிப் பால் ஊற்றிவிட்டு செல்கிறேன்
கலங்கியபடி!

கட்டிய கண்ணீரைக் கூட
சிந்த முடியாமல் நான் 
ஆண்பிள்ளை அழக் கூடாது
அதையும் கற்றுக் கொடுத்திருக்கிறாய் நீ...

செல்லவும் மனமில்லாமல் 
தங்கவும் மனமில்லாமல் 
செல்கிறேன் உன் பிள்ளை 
கனத்த இதயத்தோடு 
வேஷக்காரன் இவன் 
என்று மட்டும் ஏசிடாதே !
சென்று வருகிறேன் 
என் மாநகரே 
நான் சென்று வருகிறேன்...